திருச்சியில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். காவல் ஆணையர் அ.அமல்ராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, நெடுஞ்சாலை, மின்வாரியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், காவேரி மருத்துவமனை மற்றும் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அருகாமையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்கூடங்கள் அமைப்பது, அவற்றை அருகில் உள்ள கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் நிர்வகிப்பது என முடிவு செய்யப்பட்டது.