மாநகராட்சி குறைகள் கூற "ஸ்மார்ட் திருச்சி' செயலி
திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்கவும் ஸ்மார்ட் திருச்சி என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வார்டுகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, வீடுகளில் உருவாகும் குப்பைகளைத் தரம் பிரித்து கொள்முதல் செய்ய வீடு தேடி செல்லும் வகையில் 170 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அவர்களாகவே உரமாக்கும் திட்டமும் ஊக்குவிக்கப்படுகிறது.
எனவே, மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் குறித்து தெரிந்து கொள்ளவும், குப்பைகள் பராமரிப்பு மற்றும் இதர மாநகராட்சி சேவைகளில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்கவும் ஸ்மார்ட் திருச்சி எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் பதிவிறக்க வேண்டும். இதுதொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர், மாணவிகள் மூலம் வீடுதோறும் சென்று பிரசாரம் செய்யப்படுகிறது. எனவே, வீடு தேடி வரும் மாணவர்களுக்கு மாநகர மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆணையர்.