ரயில்வே ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.18,000 என கணக்கிட்டு, 100 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை: ரயில்வே துறையில் 1979- 80 நிதியாண்டு முதல் உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறுபாடு இன்றி அனைத்து ஊழியர்களுக்கும் மாத ஊதியம் ரூ.7,000 என வரையறுக்கப்பட்டு அதன்
அடிப்படையில் குறிப்பிட்ட நாள்களுக்கு போனஸ் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், கடந்தாண்டு 78 நாள்கள் ஊதியம் (ரூ.17,940) போனஸாக வழங்கப்பட்டது.
உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் என்பதால் உற்பத்தி அதிகரிக்கும் போது போனஸும் அதிகரிக்க வேண்டும். 2009-10ஆவது நிதியாண்டில், ரயில்வே 888 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது. அப்போது மத்திய அரசு 77 நாள்களுக்கான போனஸ் தந்தது. 2011-12 ஆவது நிதியாண்டில், 969.98 மில்லியன் டன் சரக்குகள் கையாண்ட நிலையில் கூடுதலாக ஒரு நாள் சேர்த்து 78 நாள்கள் ஊதியம் வழங்கப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டு ரயில்வே கையாண்ட சரக்கு 1,160 மில்லியன் டன், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தால் ரூ.1.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது.
இதுதவிர கட்டணமில்லா வருவாய் மூலம் ரூ. 8 ஆயிரத்து 600 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. எனவே போனஸ் நிர்ணயம் செய்ய குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.18000 என கணக்கிட வேண்டும்.
மேலும் உற்பத்தித் திறன் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்கு 100 நாள்கள் போனஸை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.