திருச்சி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை அக்.10-க்குள் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுடனான செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு. ராசாமணி பேசியது: திருச்சி மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் விடுபட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
அந்தநல்லூர், திருவெறும்பூர், மணப்பாறை, மணிகண்டம், வையம்பட்டி, புள்ளம்பாடி, துறையூர், முசிறி, தொட்டியம், லால்குடி, உப்பிலியபுரம், மருங்காபுரி, தாத்தையங்கார்பேட்டை ஆகிய வட்டாரங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளை ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கடந்தாண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். 25 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு விரைந்து வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளிலேயே 100 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர்களும், வட்டாரக் கல்வி அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அரசு அனுமதியில்லாமல் இயங்கும் பள்ளிகளை அக்.10-க்குள் கண்டறிந்து அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள் உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். மேலும், எத்தனை பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் மாவட்ட நிர்வாகத்துக்கு அக்.10-க்குள் வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.