திருச்சி மாவட்டம், பச்சமலையில் குறிசொல்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
துறையூர் வட்டம், வண்ணாடு ஊராட்சியிலுள்ள வாழையூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (60). உடுக்கை அடித்தும், சோழி உருட்டியும் குறிசொல்லி வந்தார். இந்நிலையில், இவரிடம் பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (50) அடிக்கடி குறி கேட்க வந்து சென்றுள்ளார்.
சனிக்கிழமை மாலை வெங்கடேசன், தனது மனைவி, மகன், மகள்கள்,மருமகனுடன் வாழையூருக்கு குறிகேட்கச் சென்றார். இரவு நேரத்தில் பேருந்து இல்லாததால் தனது வீட்டிலேயே அனைவரையும் தங்குமாறு பொன்னுசாமி கூறினார்.
இந்நிலையில் நள்ளிரவில் பொன்னுசாமி பெரியக்கட்டையால் அடித்து வெங்கடேசன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட அமளியை அறிந்து வாழையூர் கிராமத்தினர் அங்கு சென்று பார்த்த போது, வெங்கடேசன் பெரியக் கட்டையுடன் ஆக்ரோசத்துடன் அமர்ந்து இருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலை கிராம மக்கள், வெங்கேடசன், மனைவி, மருமகனைப் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பொன்னுசாமி சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.