காப்பீட்டுக் கட் டண உயர்வைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆண்டுதோறும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவதை நிறுத்த வேண்டும், கட்டுப்பாடில்லாத மூன்றாம் நபருக்கான காப்பீட்டுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இழப்பீடுத் தொகை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல். பக்ருதீன் பாபு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கராஜன், பொதுச் செயலர் மணிகண்டன், அமைப்புச் செயலர் ஜி.சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நிறைவில், மாவட்டப் பொருளாளர் அன்புச் செல்வம் நன்றி கூறினார்.