திருச்சியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
தேவதானம், பிள்ளையார் கோயில்தெருவைச் சேர்ந்தவர் ரா. பிரகாஷ்குமார் ( 34) பெயிண்டர். கீழரண்சாலை விறகுப்பேட்யைச் சேர்ந்தவர் ஆ. ராஜ்குமார்(38) சுமை தூக்கும் தொழிலாளி. நண்பர்களான இருவரும், செவ்வாய்க்கிழமை இரவு தேவதானம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் மதுஅருந்திவிட்டு நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஜெகநாதனிடம் (35) இருவரும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன், அங்கிருந்து சென்று, ஆதரவாளர்கள் 4 பேருடன் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு நின்றிருந்த பிரகாஷ்குமார், ராஜ்குமார் இருவரையும் கட்டை மற்றும் கம்பியால் தாக்கியும் கத்தியாலும் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சரண்: தப்பியோடிய ஜெகநாதன் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.