மாசி பௌர்ணமியையொட்டி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் நால்வர் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் புறப்பாடாகி, 5 ஆம் பிரகாரத்தை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழ் மாதத்தில் பௌர்ணமியோடு மாசி மகமும் இணைந்து வந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நால்வருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கயிலாய வாத்தியத்துடன் 5 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனர். ஏராளமான சிவபக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று சிவமந்திரத்தை உச்சரித்து வலம் வந்தனர்.