திருச்சியில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற இருந்த கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் காலியாகவுள்ள 80 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு பிப்.22ஆம் தேதி தொடங்கி மார்ச் 4ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருந்த இந்த நேர்முகத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.