காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் மார்ச் 2ஆம் தேதி பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் நிறுவனர் தலைவர் க.கா.இரா. லெனின் திருச்சியில் வியாழக்கிழமை கூறியது:கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசானது தமிழக மக்கள் மீது ஏராளமான பேரழிப்புத் திட்டங்களை திணித்து வருகிறது.ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம், அனல் மின் திட்டங்கள், அணு மின்நிலையம், ஓஎன்ஜிசி என அடுத்தடுத்து பேரழிவுக்கு வழிகாணும் திட்டங்களையே முன்னெடுத்து வருகிறது.சாகர்மாலா திட்டம் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான உரிமை கடலோர மீனவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் கடல் வளங்களை அபகரிக்க அனுமதிக்கப்படுகிறது. கடல் குப்பையாக மாற்றப்பட இருக்கிறது. கூடங்குளத்தில் இயங்கி வரும் உலைகளில், அணுக் கழிவுகள் உற்பத்தியாகி அங்கேயே கொட்டப்படுகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை.
நியூட்ரினோ திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் பல்லாயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை வைத்து பாறைகள் உடைக்கப்படுகின்றன. இதுபோன்ற
திட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் தஞ்சையில் மார்ச் 2இல் நடத்தப்படவுள்ளது என்றார் அவர்.பேட்டியின்போது, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவுத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், மதிமுக மாநில விவசாய அணி செயலர் ஆடுதுறை முருகன், பேரியக்க மூத்த நிர்வாகி பிச்சையப்பா,
ஊடகவியலாளர் அய்யநாதன், அகில இந்திய மகாத்மா காந்தி பேரவை தலைவர் வைர தினகரன், காவிரி தனபாலன், சட்ட ஆலோசகர் செந்தமிழ்ச் செல்வன், பேரியக்க துணை தலைவர் முகமது ரபீக், ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், ராஜா, வைரவமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.