குடிநீர் விநியோகத்தை சீரமைக்கக் கோரி மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 19 ஆவது வார்டிலுள்ள திண்டுக்கல் சாலை, பொன்னகரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். இதைத் தொடர்ந்து, குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்ய நகராட்சிப் பணியாளர்கள், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே சாலையைத் தோண்டி, குழாய்களை சரி செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தங்கள் அனுமதியில்லாமல் சாலையைத் தோண்டக்கூடாது எனக் கூறி பணிக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சிப் பணியாளர்கள் வேலையை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த 19-வது வார்டு பொதுமக்கள் பேருந்துநிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமரசம் ஏற்படவே பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.