திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தொட்டியம் வட்டம், காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (61). இவர் தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்யக் கோரி, மகன் கருணாகரனுடன் (31) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலையைச் சந்தித்து மனு அளித்தாராம்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மாற்றித் தருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து நேரில் சென்றுகேட்டும் பட்டா மாறுதல் செய்து தரவில்லையாம். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகலட்சுமி, கருணாகரன் ஆகிய இருவரும் திருச்சியிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் வியாழக்கிழமை புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீஸார் அளித்த ஆலோசனையின் பேரில், வெள்ளிக்கிழமை காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலையிடம், பட்டா மாறுதலுக்கு முதல் கட்டமாக ரசாயனம் தடவிய ரூ.5000-த்தை கருணாகரன் கொடுத்தார். வேலை முடிந்த பின்னர் மீதி பணத்தை தருவதாகக் கூறிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார், மணிமேகலையை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.