சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் முகிலனை மீட்டு ஒப்படைக்கக் கோரி பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து சென்னையில் பிப். 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
கூடங்குளம் அணு விலை விவகாரம், காவிரியில் மணல் கொள்ளை, நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களுக்கு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், போலீஸார் துப்பாக்கிச் சூடு என தொர்ந்து தமிழர்கள் நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும் போராடி வருபவர் முகிலன். ஏற்கெனவே போலீஸாரால் கடத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறி பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், கடந்த 15ஆம் தேதி சென்னையில் பேசிய முகிலன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய வன்முறை காட்சிகள் குறித்து புகைப்பட ஆதாரங்கள் இருப்பதகாவும், திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு நீதிமன்றத்தில் போலீஸார் உரிய பதில் அளிக்க வேண்டும் என கூறினார். இதன்பிறகு, எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து மதுரை செல்ல இருந்தவரைக் காணவில்லை.
ரயில்நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி மட்டுமே பதிவாகியிருப்பதாகக் கூறும் போலீஸார், அதன் பிறகு உள்ள விடியோ காட்சிகளை வெளியிடவில்லை. முகிலனை மீட்டு ஒப்படைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இணைந்து சென்னையில் பிப். 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.
பேட்டியின்போது, தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், வழக்குரைஞர் கென்னடி, குடந்தை அரசன், டைசன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.