திருச்சி விமானநிலையத்தில் ரூ. 26.26 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், மலேசிய குடியுரிமை பெற்ற விக்னேஷ்வரன் (31) என்பவர் உரிய அனுமதியின்றி ஆடைகளுக்குள் மறைத்து கொண்டுவந்த ரூ. 6.96 லட்சம் மதிப்பிலான 226 கிராம் தங்கச் சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், துபையிலிருந்து இலங்கை வழியாக திங்கள்கிழமை காலை வந்த விமான பயணி ஆமதாபாத்தைச் சேர்ந்த கு. கெருண்ணிஷா (42) என்பவர் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 19.30 லட்சம் மதிப்பிலான 599 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.