பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி தில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ரூ.97கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலிலிருந்து பீமநகர் பங்காளி தெரு வரை ரூ.17.54 கோடியில் பூங்காவும், நடைபயிற்சிக்கான பாதை அமைக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பல அடுக்குகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமையவுள்ளது. 3 மாடிக் கட்டடமாக அமையவுள்ள இக்கட்டடத்தில் ஒரே நேரத்தில் 146 கார்களும், 528 இருசக்கர வாகனங்களும் நிறுத்தலாம். இதற்காக ரூ.19.70 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்க உள்ளது.
இதேபோல், தில்லைநகர் 7ஆவது குறுக்குச் சாலையில் 50 ஆயிரம் சதுர அடியில் ரூ.15 கோடி யில் வணிகவளாகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், 18 கடைகளுடன் தரைத்தளமும், 22 கடைகளுடன் முதல்தளமும், கூட்ட அரங்குடன், 6 அலுவலகங்கள் அடங்கிய இரண்டாவது தளமும், 8 அலுவலக கட்டடங்களுடன் மூன்றாவது தளமும் கட்டப்படுகிறது இந்த வளாகத்துக்கு அருகில் 35 கார்களும், தரைத்தளத்துக்கு கீழே 15 கார்களும் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கும் வகையில் கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர்
ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.