திருச்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரசாயன உரமில்லா கரும்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றார் வியாபாரி.
பொங்கல் என்றாலே கரும்பு தான் முக்கியத்துவம் பெறுகிறது. காந்தி சந்தை, சத்திரம் பேருந்து நிலையம், புத்தூர்சந்தை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், உறையூர் கடைத்தெரு ஆகிய பகுதிகளில் கரும்பு விற்பனை களை கட்டியிருந்தது. இதில், ஒரு கரும்பின் விலை ரூ.30 முதல் ரகத்துக்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் ரசாயன உரம் போடப்பட்டவையாகவும் இருந்தன.
இதில் புதுமையாக இந்தாண்டு, தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதனை பொதுமக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் விலை மற்ற கரும்புகளை விட 10 ரூபாய் கூடுதலாக இருந்தது.
சாதாரண கரும்புகள் 10 அடங்கிய ஒரு கட்டின் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. அதே நேரத்தில் தரமான ரசாயன உரம் போடப்படாத கரும்புகள் 10 அடங்கிய கட்டு ஒன்றின் விலை ரூ.400 முதல் ரூ.450 வரையாகவும் இருந்தது. விலை கூடுதல் காரணமாகவும், ரசாயன உரம் போடப்படாத கரும்புகள் விற்பனையாகும் இடம் பொதுமக்களுக்கு தெரியாத காரணத்தாலும் விற்பனை குறைவாகவே இருந்தது.
இது குறித்து திருச்சி தில்லைநகரில் ரசாயன உரம் போடப்படாத கரும்புகளை விற்பனை செய்து வந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், ரசாயன உரம் போடப்படாத கரும்புகள் திருச்சி அருகேயுள்ள துறையூரிலும், திருக்காட்டுப் பள்ளியிலும் விளைந்திருந்ததை அறிந்து அதனை அதிக அளவில் கொள்முதல் செய்து விற்பனைக்காக கொண்டு வந்தேன்.
பொதுவாக கரும்பு மருத்துவக் குணம் உடையது. வைட்டமின் சத்துக்களும், கனிமச் சத்துக்களும் அதிகமாக இருக்கும். உடலை வெப்பத்தை தனிக்கும் குணமுடையது. முன்னோர்கள் உடலை இரும்பாக்குவது கரும்பு என்றும் சொல்லி இருப்பதால் தான் பொங்கல் பண்டிகையின் போது கரும்பும் முக்கியமான ஒன்றானது.
சாலையோரங்களில் கிடைக்கும் கரும்புகளோடு ஒப்பிடுகையில் ரசாயன உரம் போடப்படாத கரும்பை வாங்கி வந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வோம் என்று அதிகமாக வாங்கி வந்து இருப்பு வைத்துள்ளேன்.
ஆனால் பொதுமக்கள் இதனை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றார்.