திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தமிழ்ச்செல்வன் (20), சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுத் துறை இறுதியாண்டு மாணவர்.
லால்குடி அருகேயுள்ள கோவண்டாகுறிச்சி பிச்சை மகள் மகேஸ்வரி (20), கொணலை பகுதியில் உள்ள இந்திராகாந்தி செவிலியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலர்கள்.
செவ்வாய்க்கிழமை இருவரும் இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு சிறுகனூர் தச்சன்குறிச்சி வழியாக புள்ளம்பாடி சென்றனர். குமுளூர் அருகே வழிமறித்த 4 பேர் தமிழ்ச்செல்வனைக் கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை குறித்து தமிழ்ச்செல்வன் தம்பி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிந்து, கொலையாளிகளைத் தேடுகின்றனர். மகேஸ்வரியிடம் விசாரிக்கின்றனர்.