தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டையில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை தொடங்கியது.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டையில் ஆண்டுதோறும் தை 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் திருவள்ளுவர் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு விழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, திருவள்ளுவர் சிலைக்கு பேரவைப் புலவர் சானா. மகேஸ்வரன் ஜோதிடர் மாலை அணிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட பேரவைக்கூடம் மற்றும் சுமார் 5 அடி உயரத்தில் தீட்டப்பட்ட திருவள்ளுவர் ஓவியம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மருத்துவ அலுவலர் சி. ராஜாஜி பேரவைக்கூடத்தையும், திருவள்ளுவர் ஓவியத்தையும் திறந்து வைத்தார். இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து, இரவு மாட்டுப்பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இந்திர வழிபாடு, மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உணவூட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில், வள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் அறிவழகன், அகிலன், நக்கீரன், சிவகுரு, சிவனேசன், நீலகிரி, அகத்தியன், அன்புமணி, அஜித், குகன், வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இரண்டாவது நாள் நிகழ்வாக, வியாழக்கிழமை பகலில் மஞ்சுவிடுதலும், அதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் தினவிழா போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் (அதிக எண்ணிக்கையில் தவறின்றி) திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, ஓட்டப் பந்தயம், கபடிப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலம், பாட்டு, மாறுவேடப்போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.