பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து கல்வி, பணி காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் சென்றதால் திருச்சி ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து கல்வி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி வியாழக்கிழமை காலை முதல் திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ரயிலில் செல்ல முன்பதிவு செய்யாதவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் முன்பதிவில்லா பெட்டியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை சென்ற அனைத்து ரயில்களிலும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
சில பயணிகள் குறிப்பிட்ட ரயிலில் செல்ல முடியாததால் ஏமாற்றத்துடன் அடுத்து வரக்கூடிய ரயிலுக்கு காத்திருந்தனர். ஒரு சிலர் பேருந்து மூலம் செல்ல மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். விடுமுறை காலங்களில் திருச்சியில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருவதால் ரயில் வழியான பயணத்தை மேற்கொள்வதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை மட்டுமல்லாது வரும் 20ஆம் தேதி வரையிலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக அலைமோதும் என்பதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.