திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வயல்வெளியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் தூக்கில் தொங்குவதாக துவாக்குடி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்ததில் , அவர், சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த பாத்திர வியாபாரி நடராஜன் (50) என்பது தெரியவந்தது . இவர் கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால், இந்தப் பகுதிக்கு ஏன் அவர் வந்தார் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சடலமாக தொங்கிய நிலையில் அவரது கைகள் முன்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.