திருச்சியில் அனைத்து இடங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள்: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
திருச்சியில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
அண்ணா விளையாட்டரங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அவர் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் 1,086 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. அதில் 600 கேமராக்கள் பொருத்தப்பட்டு, மீதி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். இதனால் திருச்சியை குற்றமே இல்லாத மாநகரமாக உருவாக்க முடியும்.
அண்ணா விளையாட்டரங்கம், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் அதன் சுற்றியுள்ள சாலைகளிலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் ரூ. 10 லட்சத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக ஜமால் முகமது கல்லூரி நிர்வாகத்தின் செயலர் ஏ.கே. நஜிமுதீன் ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார். இந்த கேமராக்கள் மூலம் டி.வி.எஸ். டோல்கேட் முதல் ஜமால் முகமது கல்லூரி சாலை, காவல்துறை அணிவகுப்பு மைதான சாலை, அண்ணா விளையாட்டரங்கம், ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். இதையடுத்து, ஜமால் முகமது கல்லூரி, ஜோசப் கண் மருத்துவமனை அருகே தலா ரூ. 9 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் அ.மயில்வாகனன், என்.எஸ். நிஷா, மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.புண்ணியமூர்த்தி, ஜோசப் கண் மருத்துவமனை உதவி இயக்குநர் அகிலன் அருண்குமார் மற்றும் பலரும் பங்கேற்றனர்.