திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைத்தேர் திருவிழாவின் எட்டாம் திருநாளான சனிக்கிழமை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
இக்கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. எட்டாம் திருநாளான சனிக்கிழமை மாலை நம்பெருமாள், ரங்கவிலாச மண்டபத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. , சப்தாவரணம் ஜன.21 ஆம் தேதியும், ஆளும் பல்லக்கு ஜன.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.