திருச்சியில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில், தென்னூர் உழவர் சந்தை அருகே தொடங்கிய பேரணியை மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். இதில்,சைக்கிள் கிளப் நிர்வாகிகள், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள், தன்னார்வ நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நீதிமன்றம் வழியாக வெஸ்ட்ரி பள்ளி, ஆட்சியரகச் சாலை, ஐயப்பன்கோயில் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் உழவர்சந்தை பகுதியில் பேரணி நிறைவடைந்தது. எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் பேரணியில் சென்றோர் விநியோகித்தனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எல்பிஜி வர்த்தக மூத்த மேலாளர்
பி. ஜெயசங்கர், தலைமைப் பகுதி மேலாளர் என். ரவிசங்கர், துணைப் பொது மேலாளர் சந்தோஷ்குமார், சிவமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் விழாவில் பங்கேற்று, எரிபொருள் சிக்கன உறுதிமொழியும் ஏற்றனர்.