எந்த தடையை ஏற்படுத்தினாலும் நாங்கள் போட்டியிடுவதையோ எங்களது வெற்றியையோ யாராலும் தடுக்க முடியாது என்றார் அமமுக துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன்.
திருச்சியில் அமமுக தேர்தல் அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் மேலும் கூறியது, நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம், யார் எந்த தடையை ஏற்படுத்தினாலும் நாங்கள் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது. வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்த வாய்ப்புள்ளது.
அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. 95 சதவீத அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எங்கள் பக்கம் இருக்கும் போது எந்த யுக்தியையும் நாங்கள் கையாள வேண்டிய அவசியம் இல்லை. மக்களைச் சந்தித்தாலே போதும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
கருத்து திணிப்புகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். இதனால் ஊடகத்தின் நம்பகத் தன்மை கேள்வி குறியாகும். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். 25 ஆம் தேதி நீதிமன்றமும் நல்ல முடிவை தரவில்லையென்றால் மக்கள் மன்றத்திற்கு செல்வோம். எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் வேட்பாளர் ம. ராஜசேகரன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆர்.மனோகரன்,ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.