கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே ஆட்டோவும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டதில் தாயும், குழந்தையும் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழ்வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் முகில்வண்ணன் (25). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சாந்தி (20). இவர்களது ஒரு வயது பெண் குழந்தை தீபிகா.
முகில்வண்ணன் தனது மனைவி, குழந்தையுடன் ஆட்டோவில் வியாழக்கிழமை மாலை நெய்வேலி ஆர்ச்-கேட் நோக்கி வந்துகொண்டிருந்தார். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், வடக்குத்து பகுதியில் சென்றபோது, பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு-நேர் மோதிக்கொண்டன. பேருந்தை பண்ருட்டி, அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேவநாதன் (30) என்பவர் இயக்கினார்.
இந்த விபத்தில், சாந்தி, தீபிகா இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முகில்வண்ணன், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து நெய்வேலி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.