மந்தாரக்குப்பம் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம் கடை வீதியில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, தொழுகைக்கு வந்ததுபோல நடித்த மர்ம நபர், தொழுகை நடத்தும் இடத்தின் அருகிலிருந்த சுமார் 4 அடி உயரமுள்ள உண்டியலை திருடிச் சென்றார். தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் இதை கவனிக்கவில்லையாம். பின்னர் அந்த நபர் தோட்டத்துக்கு அருகே தயாராக நிறுத்தி வைத்திருந்த காரில் உண்டியலுடன் ஏறி தப்பிச் சென்றார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த பதிவுகளை ஆய்வு செய்ததில், சுமார் 5 அடி உயரமுள்ள அந்த நபர் கடந்த 14, 15 ஆகிய தேதிகளிலும் இங்கு வந்து தொழுகையில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிவாசல் தரப்பினர் கூறுகையில், கடந்த
ஒன்றரை ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படவில்லை. அதில் சுமார் ரூ.70 ஆயிரம் வரை காணிக்கைகள் இருக்கலாம் என்றும்
தெரிவித்தனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.