சாலை விதியைக் கடைப்பிடித்த புதுமண தம்பதிக்கு கடலூர் காவல் துறையினர் நூலைப் பரிசளித்து வாழ்த்தினர்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பிரிவு காவலர்கள் நகர அரங்கம் அருகே உள்ள ரவுண்டானாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்தவர்களை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் த.சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் நிறுத்தி அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, கழுத்தில் மாலையுடன் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்தவரைக் கண்ட போலீஸார் காரை நிறுத்தினர்.
திருமணம் முடிந்த தம்பதி கழுத்தில் மாலையுடன் சீட் பெல்ட அணிந்து காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தம்பதிக்கு திருக்குறள் நூலைப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையினால் புதுமணத் தம்பதி மகிழ்ச்சி அடைந்தனர்.