காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, பண்ருட்டி காவல் நிலையத்தை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பை வண்டிகளுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
பண்ருட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் விஷ்ணுப் பிரியா. இவர் திங்கள்கிழமை காலை பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே மொபெட்டில் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தை அதன் ஓட்டுநர் பழனி பின்பக்கமாக இயக்கினார். அந்த வாகனம் உதவி ஆய்வாளர் மீது மோதுவதுபோல வந்ததாம். இதையடுத்து உதவி ஆய்வாளர் விஷ்ணுப் பிரியா, குப்பை வண்டி ஓட்டுநர் பழனியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் பலர் குப்பை அள்ளும் வாகனங்களுடன் காவல் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துப்புரவு அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, ஆரோக்கியசாமி ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குப்பை வண்டி ஓட்டுநர் பழனிக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து அவரை அனுப்பி வைத்தனர்.