கஜா புயலையொட்டி, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுப் போக்குவரத்து புதன், வியாழக்கிழமைகளில் ( நவ.14,15) நிறுத்தப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் வியாழக்கிழமை (நவ.15) கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதுடன், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி, சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுந்தரவனக் காடுகள் சுற்றுலா மையத்தில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனச் சரக அலுவலர் எம்.வெங்கடேசன் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பிச்சாவரம் சுந்தரவனப் பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் இயக்கப்படும் சுற்றுலாப் படகு போக்குவரத்து புதன், வியாழக்கிழமைகளில் ( நவ.14,15) நிறுத்தப்படுகிறது. மேலும், வனச் சரகம் சார்பில் பேரிடர் கால மீட்புப் பணிக்காக
படகுகளும், போதிய பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றார் அவர்.