கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிதம்பரம் தொகுதி
எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், சார்-ஆட்சியர் விசுமகாஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள் இருவரும் அதிகாரிகளுடன் சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட கிள்ளை, முழுக்குதுறை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். பின்னர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயலையொட்டி, கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பேரிடர் காலங்களில் அதிகம் பாதிக்கப்படும் பரங்கிப்பேட்டை, குமராட்சி ஒன்றியப் பகுதிகள், கடற்கரை கிராமங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை சார்- ஆட்சியருடன் ஆய்வு செய்தேன். இதில் புயல் பாதுகாப்பு மையங்களைப் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். நோய் பரவாமல் தடுக்க மருத்துவக் குழுக்கள் தயாராக உள்ளன என்றார் அவர்.
ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அசோகன், கிள்ளை நகர கழகச் செயலர்
விஜயன், எம்ஜிஆர் மன்றச் செயலர் வீரபாண்டியன், செல்வம், சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் தமிழ்செல்வன், புவனகிரி
வருவாய் வட்டாட்சியர் ஹேமா, பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், தங்கம், பொறியாளர்
சந்தான கிருஷ்ணன் ஆகயோர் உடனிருந்தனர்.