விருத்தாசலத்தில் மணல் குவாரி திறக்கக் கோரி, ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர்
ஆர்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் மணிமுத்தாற்றுப் பகுதிகளான தொட்டிக்குப்பம், சின்னப்பரூர், பரவளூர் ஆகிய இடங்களில் அரசு மணல் குவாரி திறக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பின்பு, விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரும், சார் ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்திடம் மனு அளித்தனர்.
மணல் குவாரி திறக்க சார்-ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும், குவாரி திறக்காவிட்டால் அனைத்து மாட்டு வண்டித் தொழிலாளர்களையும் திரட்டி மாட்டு வண்டிகளுடன் வந்து காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம் என்றும் சங்கத்தினர் தெரிவித்தனர்.