கடலூர் மாவட்டத்தில் 428 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த புத்தாக்க பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 224 பேர் ஊரக பகுதிகளையும், 22 பேர் பேரூராட்சி பகுதிகளையும், 182 பேர் நகராட்சி பகுதிகளையும் சார்ந்தவர்கள். இதேபோன்று 90 நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஊரக பகுதிகளில் 42 பேரும், பேரூராட்சி பகுதிகளில் 11 பேரும், நகராட்சி பகுதிகளில் 37 பேரும் அடங்குவர். இவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டதில் இக்காய்ச்சல்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) கலா, துணை இயக்குநர் (சுகாதாரம்) கீதா, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.ரகுநந்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.