கடலூர் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நகராட்சிக்குள்பட்ட ஸ்ரீபத்மாவதி நகரில் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுதொடர்பாக, புதன்கிழமை கஜா புயல் முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அரசின் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடியின் காரை வழிமறித்து நகரின் நிர்வாகிகள் புகார் அளித்தனர். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று நிலையை விளக்கினார். இதனையடுத்து, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி பிரச்னையை சரிசெய்வதோடு, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதன்படி அந்தப் பகுதிக்கு பொறுப்பான சுகாதார மேற்பார்வையாளர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து கடலூர் நகராட்சி ஆணையர் (பொ) பாலு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
புதிய ஆணையர்: இந்த நிலையில், கடலூர் நகராட்சியின் புதிய ஆணையராக மதிவாணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இவர், ஆவடி நகராட்சியிலிருந்து இடமாறுதலில் கடலூர் வந்துள்ளார். அதே நேரத்தில் நகராட்சியின் பொறியாளர் ராமசாமிக்கு ஊர் குறிப்பிடாமல் கடலூரிலிருந்து பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.