நிலம் அளவீடு செய்ய ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (40). இவர் தனது நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அந்த அலுவலகத்தில் நிலஅளவையராக பணிபுரிந்து வந்த விருத்தாசலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த நா.செல்வராஜ் (58), நிலத்தை அளவீடு செய்து தர ரூ.ஆயிரம் லஞ்சமாக பெற்றாராம். இதுதொடர்பாக, மாவட்ட ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு போலீஸார் செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை கடலூரில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து மாவட்ட குற்றவியல் நீதிபதி ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து செல்வராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் அண்மையில் பணி ஓய்வு பெற்றார்.