கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வாய்க்கால் ஓரத்தில் கிடந்த பெண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
சிதம்பரம் அருகே செட்டிமுட்டு கான்சாகிப் வாய்க்கால் ஓரத்தில், சுமார் 7 மாத பெண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் குழந்தையின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குழந்தை யாருக்குச் சொந்தமானது, உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.