பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான கார்த்திகை மாத முதல் சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை 11 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் வீரட்டானேஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் நாகாபரத்துடன் புஷ்ப அலங்காரத்திலும், பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கியுடன் புஷ்ப அலங்காரத்திலும் காட்சியளித்தனர். இரவு 8 மணியளவில் சோட சோபசார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.