கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்களை என்எல்சி இந்தியா நிறுவனம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் வழங்கியது.
மேலும், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மீட்புப் பணிக்காக தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கஜா புயலால் கடலூர் மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வுத் திட்டம் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பில் ரொட்டி, பால் பவுடர், நாப்கின், கொசுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தது.
இதேபோல, கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், மன்னார்குடி, ஒரத்தநாடு, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்காக, நெய்வேலியில் இருந்து மரம் வெட்டும் 200 தொழிலாளர்கள், 250 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களை என்எல்சி நிறுவனம் திங்கள் கிழமை அனுப்பி வைத்தது.