கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்ட விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் குறைக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான கூட்டம் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
இந்தக் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படவுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.