கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தமிழ்நாடு - புதுவை மாநில இணைப் பொதுச் செயலர் கோ.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் தமிழகத்தில் 7 கடற்கரை மாவட்டங்கள் உள்பட 21 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மீன்பிடி படகுகள் பெரும் சேதமடைந்துள்ளன. எனவே, 25 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்த படகுகளுக்கு அரசே பொறுப்பேற்று புதிய படகு வழங்க வேண்டும். அதற்கு கீழ் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
புயல் அறிவிப்பு வெளியான நாள் முதல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாததால் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வீதம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
இதேபோல, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். விளை நிலங்களின் பாதிப்புக்கும் முழுமையாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தினார்.