பைக், நகைகள் திருடியது தொடர்பாக சிதம்பரத்தில் போலீஸார் இருவரைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பைக், 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீஸார் திங்கள்கிழமை இரவு செட்டிமுட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த புதுச்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் அரவிந்த் (20), சிதம்பரம் தில்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரியோதனன் மகன் சூரியா என்ற மணிகண்டன் (21) ஆகிய இருவரையும் தடுத்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் வந்தது திருட்டு பைக் எனத் தெரியவந்ததாம்.
இதையடுத்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இருவரும் பல்வேறு இடங்களில் நகைகளை திருடியதும் தெரியவந்ததாம். இருவரிடமும் இருந்து 12 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடந்த 18-ஆம் தேதி இவர்கள் இருவரும் சிதம்பரம் அருகே மணலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த புதுச்சேரி வில்லியநல்லூர் குளத்துமேட்டுத்தெருவைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரது பைக்கை திருடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.