கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடி வழங்கப்படும் என என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
கஜா புயலால் தமிழகத்தின் 9 மாவட்டங்கள் குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்துள்ளன.
அங்கு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மின்சாரக் கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாரளமாக நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, என்எல்சி இந்தியா நிறுவனம் முதல் கட்டமாக டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்களையும், உணவுப் பொருள்களையும் அனுப்பியது. அடுத்த கட்டமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 500 பணியாளர்களை அனுப்பியது.
மேலும், தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன் வந்தனர். இந்தத் தொகையுடன் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ. 3 கோடி வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.