பிச்சாவரம் பகுதியை இணைக்க வசதியாக ராஜன் வாய்க்காலில் இணைப்பு பாலம் கட்டி தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளது.
கடலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வடக்கு பிச்சாவரம் கிளைச் செயலர் பி.டி.ராஜா மற்றும் கிராம மக்கள் அளித்த மனு: சிதம்பரம் வட்டம், வடக்கு பிச்சாவரத்தில் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அருகே தெற்கு பிச்சாவரம், தா.சோ.பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களிலிருந்து அருகில் உள்ள
சுற்றுலாத் தலமான பிச்சாவரம், கிள்ளை போன்ற பகுதிகளுக்கு வருவதற்கு பல ஆண்டுகளாக படகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் இந்தக் கிராமங்கள் தனி தீவாகிவிடுகின்றன. கிள்ளை கடைத் தெருவுக்கு வரவேண்டுமென்றால் கூட 20 கி.மீ. தூரம் சுற்றி வரும் நிலைதான் உள்ளது. எங்கள் கிராமத்துக்கும், பிச்சாவரம் பகுதிக்கும் இடையில் உள்ள ராஜன் வாய்க்காலில் இணைப்பு பாலம் கட்டிக்கொடுத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
ராஜன் வாய்க்கால் இடையில் இணைப்பு பாலம் அமைத்தால் கடலூர், பரங்கிப்பேட்டை, கிள்ளை, சுற்றுலா பிச்சாவரம், மாவட்ட எல்லையான கொடியம்பாளையம் வரை கிழக்கு கடற்கரை சாலை செல்லும். இது தா.சோ.பேட்டை, தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், ஜெயங்கொண்ட பட்டினம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்தனர்.