கீழ்அருங்குணத்தில் கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பண்ருட்டி வட்டம், கீழ்அருங்குணம் காலனியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுமார் 15 பேர் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்களது கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகிலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பெரியாண்டவர் கோயில் அருகிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக இந்த விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், தகவல் தெரிவித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று சாராயம் விற்பவர்கள் மிரட்டி வருகின்றனர். ஆனால், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மாணவர்கள் புகார் அளித்தனர்.