பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் பழனிச்சாமி (34), கட்டட தொழிலாளி. இவர் புவனகிரி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் கட்டடத் தொழிலாளியிடம் வேலைகேட்டு கடந்த ஆண்டு ஏப்.11-ஆம் தேதி அந்த கிராமத்துக்குச் சென்றார்.
இரவு நேரமானதால் அந்தத் தொழிலாளியின் வீட்டுக்கு வெளியிலேயே தூங்கியுள்ளார்.
அப்போது, வீட்டுக்குள் படுத்தவர்கள் கதவை தாழிடவில்லையாம். அதிகாலையில், அந்த வீட்டிலிருந்த பெண் எழுந்து பார்த்தபோது, அவரது 3 வயது பெண் குழந்தையைக் காணவில்லை. மேலும், வீட்டுக்கு வெளியே படுத்திருந்த பழனிச்சாமியும் அங்கில்லை.
அந்தப் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் தேடியபோது, குழந்தையின் அலறல் சப்தம் கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை பழனிச்சாமி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கிராம மக்கள் அவரைப் பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின்கீழ் (போக்சோ) சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
அதில், போக்சோ சட்டத்தின் கீழ் பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பழனிச்சாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.