குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
கடந்த 2015-இல் பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது, ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், நிகழாண்டு பருவ மழையை எதிர் கொள்ளவும், அதனால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கும் வகையில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அரசு அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேரமுக உதவியாளர் ராம்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலவலர் ஒருவர் கூறுகையில், விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அவர் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அதுவரை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றும், புள்ளி விவரங்களை அளிப்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம். எனவே, குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பேரிடர் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.