கடலூரில் சாலையோரத்தில் உள்ள பழைமையான மரங்கள் இரவோடு, இரவாக வெட்டி அகற்றப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் நகரில் சாலை விரிவாக்கம், கால்வாய் கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை வேறு துறையினர் தங்களது பணிக்காக சேதப்படுத்தும் நிலை தொடர்கிறது. போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால் அதிக பொருள்செலவில் மேற்கொள்ளப்படும் பணிகள் சில நாள்களிலேயே சேதப்படுத்தப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில், கடலூரில் பாரதி சாலை பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் மிகப்பெரிய அளவிலான 3 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதேபோல, போக்குவரத்துப் பணிமனை அருகே உள்ள பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
வெட்டப்பட்ட மரங்களின் கிளைகள் மட்டுமே அந்தப் பகுதியில் எஞ்சிக் கிடக்கன்றன. மிகப் பெரிய அளவிலான மரத் துண்டுகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த மரங்களை யார் வெட்டினார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
கடலூர் நகராட்சி சார்பில் தற்போது வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறுவதால் அதற்காகவும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், குறிப்பாக எந்தத் துறையினர் மரங்களை வெட்டினர் என்ற விவரத்தை அவர்களை தொடர்பு கொண்டும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் வயதுடைய சாலையோர மரங்கள் இரவோடு, இரவாக வெட்டப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் திருமலை கூறியதாவது: சாலையோரங்களில் நிழலுக்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் வளர்ச்சிப் பணிகளின் பேரில் வெட்டப்பட்டு வருகின்றன.
வெட்டப்படும் மரங்கள் குறித்து முன்னரே தகவல் தெரிவிப்பதோடு, அதற்கு மாற்றாக உடனடியாக அதேப் பகுதியில் மரக் கன்றுகளை நட வேண்டும்.
மரங்கள் வெட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் முடிந்த வரை தவிர்ப்பதோடு, தற்போது வெட்டப்பட்ட மரங்களை யார் வெட்டினார்கள் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.