சிதம்பரத்தில் திருடுபோன லாரியை போலீஸார் மீட்டு, ஒருவரைக் கைது செய்தனர்.
சிதம்பரம் தில்லைநகரைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் ராஜா (27). இவரது தனது லாரியை கடந்த 14-ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், டிஎஸ்பி ஆர்.பாண்டியன், நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாககாஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
இதில், மதுரை அருகே உள்ள சமயநல்லூரில் பிரபாகரன் (38) என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில் லாரி நிற்பதை போலீஸார் கண்டறிந்து அங்குசென்று லாரியை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சதீஷ் (45), மதுரை மேலூரைச் சேர்ந்த செல்வம் (45) மற்றும் அடையாளம் தெரியாத நபரும் இணைந்து லாரியை திருடிச் சென்று, சமயநல்லூரில் உள்ள பிரபாகரனின் இரும்புக் கடையில் லாரியை தனித், தனியாகப் பிரித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்ததாம். போலீஸார் பிரபாகரனை கைது செய்து லாரியை மீட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான சதீஷ், செல்வம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.
லாரியை மீட்ட தனிப் படை போலீஸாருக்கு சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.