அடையாளம் தெரியாத இளைஞர் ரயிலில் அடிபட்டு சனிக்கிழமை உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே திருவதிகையில் ஆயில் மின் பேருந்து நிறுத்தம் அருகே விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லும் இருப்புப் பாதையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள், இருப்புப் பாதையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. சனிக்கிழமை அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிப்பட்டு இவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடலூர் முதுநகர் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.