பண்ருட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு அருகாமையில், விழுப்புரம் - மயிலாடுதுறை இருப்புப் பாதை செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் ரயில் பாதை அருகே இறந்து கிடப்பதைக் கண்டனர். சம்பவ இடத்தில் ஓட்டுநர் உரிம அட்டை, செல்லிடப்பேசியும் கிடந்தன. ஓட்டுநர் உரிமம் அட்டையில் சிதம்பரம் வட்டம், வல்லம்படுகை அஞ்சல், காமராஜ் நகர் செல்வராஜ் மகன் தியாகு என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தது தியாகு தான் என்று உறுதி செய்யப்பட்டது. தியாகு லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர், சனிக்கிழமை இரவு வேலூர் செல்வதற்காக ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயிலில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்து தியாகு உயிரிழந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.