கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், தனியார் தொழில் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
முகாமை அதிமுக மாவட்டச் செயலரும், மாநில தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வாழ்த்திப் பேசினார். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி, தோல்வியடைந்த, 19 முதல் 27 வயதுக்குள்பட்ட பெண்கள் 350 பேர் கலந்து கொண்டனர்.
செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாஸ்கான் ஆலை நிர்வாகிகள் நேர்முகத் தேர்வை நடத்தி, 280 பேரை பணிக்கு தேர்வு செய்தனர்.
முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தை முன்னேற்றம் அடையச் செய்யவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு நல்ல ஊதியம், பணிப் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் நிறுவனம் சார்பில் வழங்கப்படுகின்றன. ஆகையால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பணிக்கு அனுப்பி வைத்து, அவர்கள் சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், கடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், ஒன்றியச் செயலர்கள் இராம.பழனிச்சாமி, பி.வி.ஜே.முத்துக்குமாரசாமி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் கே.சீனிவாச ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வம், ஜெ.அன்பு, மணி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.